Thursday, February 3, 2011

எகிப்து இந்தியருக்கு தனி விமானம், தாமரைக்குளம் தலித்துக்கு எம வாகனம்


எகிப்து இந்தியருக்கு தனி விமானம், தாமரைக்குளம் தலித்துக்கு எம வாகனம்
 - ஆதவன் தீட்சண்யா 


காந்திஜியின் நினைவுநாளான இன்று (ஜனவரி 31) தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் சடங்கை மத்திய மாநில அரசுகள் வெகுஜோராக நடத்தி முடித்திருக்கின்றன. இந்தச் சடங்கை நிகழ்த்துகிற நாளிலாவது ஒரு ஒப்புக்காகவேனும் தீண்டாமைக்கொடுமைகள் நிகழாத வண்ணம் ஜோடித்துக் காட்டுவதற்கும்கூட துப்புக்கெட்டு கிடக்கின்ற அரசுகள் இந்த நாட்டுக்கு வாய்த்திருக்கின்றன.

உத்தபுரத்தில் ஆயிரக்கணக்கான போலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எதைப் பாதுகாக்க? அங்குள்ள முத்தாலம்மன் கோவிலுக்குள் தலித்துகளுக்குள்ள வழிபாட்டுரிமையைப் பாதுகாக்கவா? அப்படியொரு சுக்குமில்லை. அந்த கிராமத்தில் உள்ள ஆதிக்கசாதியினரின் தீண்டாமை வெறியை அரசு செலவில் பாதுகாக்க அங்கு போலிசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள், வழிபாட்டுரிமையை நிலைநாட்டச் சென்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் தொண்டர்களையும் உத்தபுரம் தலித்துகளையும் தடுத்து நிறுத்தி ஆதிக்கசாதியினரின் குற்றச்செயலுக்கு காவல் காத்து நின்றுள்ளனர். வாழும் சமத்துவப் பெரியாரது ஆட்சியின் வண்டவாளம் இப்படியாக தண்டவாளம் ஏறுவது உத்தபுரத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட இதே கொடுநிலைதான் என்பதற்கு இதோ இன்றைய புத்தம்புது உதாரணம் தாமரைக்குளம் வன்கொடுமை.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமம் தாமரைக்குளம். அங்குள்ள தலித்துகளின் 33 வீடுகளும் நேற்று (30.1.11) மாலை ஆறரை மணியளவில் தாமரைக்குளம் கள்ளர்களாலும் தச்சனேந்தல் தேவர்களாலும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த கடையும் கூரைவீடுகளும் அறுவடை செய்து களத்திலிருந்த நெற்கதிர்களும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆண்கள் வேலைநிமித்தமாக வெளியூர்களுக்கு சென்றுவிட்டிருந்த நிலையில் கைக்கு சிக்கிய பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் யாவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அய்யாக்கண்ணு என்ற முதியவர் மிகக்கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். இடிக்கப்பட்ட வீடுகளில் கேட்பாரற்றுக் கிடந்த பீரோக்களை உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெண்கள் அணிந்திருந்த நகைகளை அறுத்தெடுக்கவும் தவறவில்லை. பறையர் வீட்டுப் பீயை கிளைத்துத் தின்று கொழுத்திருந்த கோழிகளையும் களவாண்டுப் போயுள்ளனர்.

இத்தனைக் கொடூரங்களையும் அவர்கள் நிகழ்த்துவதற்கு என்னதான் காரணம்? கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்று திருமாவளவன் நடத்திய தமிழர் இறையாண்மை மாநாட்டு சுவரொட்டியை தாமரைக்குளம் தலித் இளைஞர்கள் கிராமத்திற்குள் ஒட்டிவைத்துள்ளனர். தலித் உரிமை பற்றி பேசுவதை நிறுத்திக்கொண்டு தமிழர் உரிமை பேசுகிற பொத்தாம்பொதுவான பெரியமனுசன் பாத்திரத்தை திருமாவளவனுக்கோ தலித்துகளுக்கோ வழங்க ஆதிக்கசாதி மனம் இடம் கொடுத்துவிடுமா என்ன? இறையாண்மை மாநாட்டு சுவரொட்டிகள் மீது சாணியடித்து தன் ஒவ்வாமையை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து முக்குளம் காவல்நிலையத்தில் தலித்துகள் புகாரிட்டதை முன்னிட்டு இந்த சாணியடிப்பு சண்டியர்களை விசாரணைக்கு அழைத்துப்போயுள்ளது போலிஸ். அப்போதைக்கு தப்பிக்க காவல்துறையினர் முன்னிலையில் தலித்துகளை சமாதானம் செய்த கள்ளர்கள் குற்றவாளிகளை அழைத்துவந்துவிட்டனர். ஆனாலும், தங்களை மீறி போலிசுக்குப் போய்விட்ட தலித்துகளின் தைரியத்துக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற அவர்களின் வன்மம் அடங்கவில்லை. பொங்கல் சமயத்தில் தாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் 30.1.11 அன்று மாலை வன்கொடுமை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர்.

தாமரைக்குளம் கள்ளர்களுடன் தச்சனேந்தல் தேவர்களும் இந்த வெறியாட்டத்தில் இணைந்துள்ளனர். சுற்றுப்பக்க கிராமங்களிலும் இவர்கள் தமது சாதியினரை திரட்டும் கெடுநோக்கில் இறங்கியுள்ளனர். இதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் திரு.ஆற்றலரசு மற்றும் பொன்திருமா ஆகியோர் தாமரைக்குளத்திற்கு சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து தைரியப்படுத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் உடனடி தலையீட்டைக் கோரியுள்ளனர். தாமரைக்குளம் தலித்துகளுக்கு உறவினரான தோழர் காசிநாத துரை ( எழுவணி கிராமம் ) தான் இந்த வன்முறை குறித்தத் தகவலை நமக்கு தெரிவித்தார். புதக்கோட்டையிலிருந்து மருத்துவர் ஜெயராமனின் அலைபேசி வழியாக இந்தச் செய்தியை சொல்லிவிட்டுக் கிளம்பிய அவர் இப்போது தாமரைக்குளத்தில் தன் சொந்தங்களோடு துணையாக இருக்கிறார்.

செய்திகளை முந்தித்தருகிற புடலங்கா புண்ணாக்கு டிவி பத்திரிகை எதுவும் இதுவரை இந்தச் செய்தியை வெளியிடவில்லை. மருத்துவர் ஜெயராமன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இப்போது சில செய்தியாளர்கள் அங்கு சென்றுள்ளனர். உத்தபுரம் கோவில் நுழைவுப்போராட்டத்தால் கைதுசெய்யப்பட்டிருந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொறுப்பாளர்களுக்கு தாமரைக்குளம் வன்முறை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்களும் விடுதலையாகி அங்கு விரைகின்றனர்.

எகிப்தில் கலவரம் என்றதும் இந்தியர்களை பத்திரமாக அழைத்துவர தனிவிமானம் அனுப்புகிற ஆட்சியாளர்கள், இன்றிரவு எவ்வகையான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற அச்சத்தில் வெட்டவெளியில் நின்று தவிக்கும் தலித்துகளைக் காப்பாற்ற இதுவரை ஒன்றையும் புடுங்கவில்லை என்பது மட்டும் உண்மை.

--

No comments:

Post a Comment